அன்பின் சக்தியை விளக்கும் அருமையான கதை நேரம்

அனைவரும் வாசிக்க வேண்டிய, அன்பின் வலிமையை விளக்கும் சிறுகதை நேரம்👇👇

அன்பின் சக்தி


ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப்பள்ளியில் கல்வி கற்றாள் லதா. எனவே, ஆறாம் வகுப்பைத் தொடர, அவள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டாள். புதிய பள்ளிக்கு சென்ற லதா, அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் பழகினாள். அவளது அன்பும் சிறந்த பண்பும், சில நாட்களுக்குள்ளே, பள்ளியிலுள்ள பலராலும் பாராட்டப்பட்டது.


ஆனால், "புதியதாக பள்ளிக்கு வந்தவள், ஒரு மாதத்திற்குள் அனைவரிடமும் நற்பெயர் வாங்கிவிட்டாள்" என்பது, அதே பள்ளியில் பல வருடங்களாக படித்து வந்த சியாமளாவின் மனதில் பொறாமையை ஏற்படுத்தியது. தன் நெருங்கிய நண்பர்களும் அவளுக்கு ஆதரவு கொடுப்பது, அவள் மனதில்  எறிந்து வந்த பொறாமைத்தீ மேலும் வளர எண்ணெய் ஊற்றியது.


லதாவின் மீதான அவளது எண்ணத்தை மாற்ற, அவளது தோழிகள் பலமுறை முயற்சி செய்தனர். ஆனால், எதுவும் பலன் தரவில்லை. அவளிடம், எவரேனும் லதாவின் நற்குணங்களைப் புகழ்ந்து கூறினால், அவள் வெறுப்போடு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுவாள். எனவே, அவள் தோழிகள்,  லதாவை பற்றி அவளிடம் பேசுவதை நிறுத்தி கொண்டனர். ஆனால், லதாவின் அன்பை மறுக்க இயலாமல், அவளிடம் பழகுவதை குறைக்கவில்லை. எனவே, லதாவின் மீதான தன்னுடைய தோழிகளின் அக்கறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தாள் சியாமளா. 


ஒருநாள், லதாவின் வகுப்பினர் அனைவரும் கபடி விளையாடிக் கொண்டிருந்தனர். லதாவும் சியாமளாவும் எதிரெதிர் அணிகளாக விளையாடினர். இந்த சூழ்நிலையை பயன்படுத்த எண்ணிய சியாமளா, மோசடிகள் செய்து தனக்கு ஆதரவாக ஆள்திரட்ட முயற்சித்தாள். 


தானாகவே தன் தலையில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டு, விளையாட்டில் விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல், லதா தன்னை துன்புறுத்தியதாக தோழிகள் அனைவரையும் நம்ப வைத்தாள் சியாமளா. அவள் கூறியவற்றை நம்பி, அவளது தோழிகள் அனைவரும் லதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிகழ்வு லதாவின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், அவள் அனைவரிடமும் அன்பு செலுத்துவதை குறையாது செய்து வந்தாள். 


ஒரு வாரத்திற்கு பின், ஆண்டு விழாவிற்காக, அவர்களது பள்ளி தயாராகி வந்தது. எனவே, வகுப்பினர் அனைவரும் ஒன்றுப்பட்டு, அவரவர் வகுப்புகளை அலங்கரித்து வந்தனர். அப்போது, எவர் உதவியும் இன்றி, பலகை மீது ஏறி நின்று தோரணங்களை சரி செய்து கொண்டிருந்தாள் சியாமளா. அவள் நின்றுக்கொண்டிருந்த பலகை ஆடுவதை கவனித்தாள் லதா. நொடியும் தாமதிக்காமல் ஓடிச்சென்று பலகையை பிடித்தாள். அவளது செயல் சியாமளாவின் மனதை உருக்கியது.


"நான் அவளுக்கு தீங்கிழைத்தேன்; ஆனால், தீங்கிழைத்தவள் தவறி விழுவதை கூட தடுத்துவிட்டது அவளது அன்பு" என எண்ணினாள் அவள். இத்தகைய நற்பண்பு உடையவளை தவறாக புரிந்து கொண்டோமே என எண்ணி வெட்கித் தலை குனிந்தாள் அவள். மேலும், லதாவின் மீது பொய்ப்பழி சுமத்தியதற்காக, தோழிகளிடம் தன்னை மன்னிக்க வேண்டினாள். 

(கதையை எழுதியவர் சுபஶ்ரீ)


நீதி: அன்பின் சக்தி அனைத்தைக் காட்டிலும் வலிமை வாய்ந்தது.


மேலும் கதைகளை வாசித்து மகிழ, கீழே கொடுக்கப்பட்டுள்ள "கதை நேரம்" என்ற லேபிலை பயன்படுத்துங்கள். கதையை பற்றி கமண்ட் செய்திடுங்கள். மேலும், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄

Comments

Post a Comment

Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Let everyone celebrate this special day with our patriotic poem

Followers of Our Blog